குரூப் 4: 4,682 பணியிடங்கள் நிரப்பப்பட்டன!

குரூப் 4இல் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 4,682 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நேற்று (செப்.16) அறிவித்துள்ளது.
இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் நிலை, நில அளவர், தட்டச்சர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை ஆகிய பதவிகளுக்கான 5,451 காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப் 4 எழுத்துத் தேர்வு 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதி, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 5,296 மையங்களில் நடைபெற்றது. அதில், பங்கேற்ற 12,51,291 விண்ணப்பதாரர்களில் 11,50,396 பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை ஆகியன டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் அடிப்படையில் ஜூலை 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்றது.
டிஎன்பிஎஸ்சி செயலாளர் எம்.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்தியில், “இளநிலை உதவியாளர் பதவிக்கான முதல்கட்ட கலந்தாய்வில் 2,708 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வில் 1,582 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுருக்கெழுத்து தட்டச்சர் கலந்தாய்வில் 392 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன அலுவலர் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். மீதமுள்ள காலிப் பணியிடங்களுக்குத் தொடர்ந்து கலந்தாய்வு நடை பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Write comments