தமிழ் கல்விச் செய்தி

தமிழ் கல்விச் செய்தி

Friday, March 24, 2017

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு ,வரும் 31-ஆம் தேதிக்குள் பணி நியமனம் வழங்கப்பட வாய்ப்பு

 

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அளவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 4,362 காலிப் பணியிடங்களை நிரப்பும் நோக்கத்தில், கடந்த 2015-ஆம் ஆண்டு மே 31-இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை மாநில அளவில் 8 லட்சம் பேர் எழுதினார்கள்.

இத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, ஒரு இடத்துக்கு 5 பேர் என்ற வீதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண்கள் பெறுவோருக்கு பணியிடம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிடாவிட்டால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறி வழக்குத் தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து கடைநிலைப் பணிகளுக்கு, நேர்முகத் தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், தேவை என்றால் எழுத்துத் தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றை மொத்தமாகக் கணக்கிட்டு இறுதி முடிவு அறிவிக்க வேண்டும் என 2015-ஆம் ஆண்டு ஆக.7-இல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிடாமல் இருந்த எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை அரசு தேர்வு துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதியோர் www.dge.tn.nic என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதில் தேர்வு பெறுவோருக்கு வரும் 31-ஆம் தேதிக்குள் பணி நியமனம் வழங்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Write comments