டெட் தேர்வு : தேர்வர்கள் அதிருப்தி!
டெட் தேர்வுக்கான விண்ணப்ப அச்சடிப்பு பிரச்னையால், மீண்டும் புதிய அறிவிப்பை வெளியிடவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., டெட் தேர்வுக்கான அறிவிப்பை பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிட்டது. அதில், விண்ணப்ப விற்பனை மார்ச், 6ஆம் தேதி தொடங்கும் என்றும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மார்ச் 23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற தேர்வுகளில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க குறைந்தபட்சம் ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும். ஆனால் இந்தத் தேர்வுக்கு 17 நாட்களே அவகாசம் தரப்பட்டுள்ளது. இதனால் பட்டதாரிகளும், தனியார் பள்ளி ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, டெட் தேர்வு எழுதவிரும்பும் பட்டதாரிகள், “சிடெட் என்ற மத்திய அரசின், டெட் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. அதேபோல், மாநில அரசின், டெட் தேர்வை டி.ஆர்.பி. அறிவித்துள்ளது. ஆனால் சி.பி.எஸ்.இ.-போல் இதில் விதிகளைப் பின்பற்றவில்லை. டி.ஆர்.பி., தாமதமாக அறிவிப்பை வெளியிட்டது. மேலும் விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும் எனத் தெரிவிக்கவில்லை. விண்ணப்பங்களை தவறாக அச்சிட்டதால், மீண்டும் விண்ணப்பங்கள் அச்சடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி., செய்த தவறால், விண்ணப்பம் வழங்கும் தேதி மார்ச் 6ஆம் தேதி வரை தாமதமாகியுள்ளது. இந்தத் தவறுக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் 17 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு, விண்ணப்பிக்கும் அவகாசத்தை ஒரு மாதமாக நீட்டிக்க வேண்டும். இல்லையெனில், டி.ஆர்.பி., மீது வழக்கு தொடரும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்

No comments:
Write comments